காலச்சுவடு ஜனவரி 2020 இதழில் தெல்ஃபின் மினூயின் தலைமறைவு நூலகம் என்ற புத்தகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை வாசித்த பின்னும், தெல்ஃபின் மினூய் பற்றி இணையத்தில் தேடிய பின்பும் நூலை உடனே வாசிக்க வேண்டும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. போர் இலக்கியங்கள் நிறைய வாசித்து இருப்போம். போரின் துயரத்தை, தனது நாட்டு படையின் பெருமையை, பிரிவினையின் துயரத்தை கூறுவதாக இருக்கும். ஆனால் இந்த புத்தகம் சிரியாவின் தலைமறைவு நூலகம் உருவான விதம் பற்றியும், யுத்த நேரத்தில் அழிக்கப்பட்ட வீடுகளில் சிதறிய புத்தகங்களை எடுத்துத் தலைமறைவு நூலகத்தை ஆரம்பித்து அதனைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகள், அரசு எதிர்ப்புரட்சியாளர்களுக்கு நூலகம் எவ்வாறு கிரியா ஊக்கியாக நிகழ்ந்தது, யுத்த நேரத்தில் புத்தகம் செய்த மாயாஜாலம், அரசுக்கு தலைமறைவு நூலகம் எவ்வளவு இடையூறாக மாறியது, யுத்த நேரத்தில் மனோதிடத்துடன் வாழ புத்தகத்தின் பங்கு, அந்த நேர புத்தக வாசிப்பு என்ன செய்யும் என்பதனை மிக அழகாக, தெளிவாக உணர்த்தக் கூடியதுதான் சிரியாவில் தலைமறைவு நூலகம்.
அதற்கு முன்பு சிரியாவின் வரலாற்றை அறிந்து வாசித்தால் புத்தகத்தின் அரசியலை நுட்பமாக உணர முடியும்.
இனி புத்தக ஆசிரியர் தெல்ஃபின்க்கும், தராயாவின் மையப்பகுதியில் இயங்கும் ரகசிய நூலகத்தின் இயக்குநர் அபு எல்-எஸ்க்கும், அவரது நண்பர் அஹ்மத் இருவரையும் ஸ்கைப், வாட் சாப், மின்னஞ்சல் வழியே நடைபெற்ற உரையாடல் தான் இப்புத்தகம். சிரியாவின் மனிதம் என்ற தலைப்பில் நிறையப் புகைப்படங்களை இணையத்தில் தெல்ஃபின் பார்த்தார்.அதன் பின் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. யுத்த கொடூரத்திற்கு நடுவே இளைஞர்கள் புத்தகத்தை சேகரிக்கும் காட்சி அதிலிருந்து தெல்ஃபின்னால் உடனே விடுபட முடியவில்லை. ஆயிரமாயிரம் நூல்கள் வழியே அங்கு காகிதச் சரணாலயத்தை ஏற்படுத்தினர். இதனை ஸ்கைப் வழியே பார்த்த பின்னர் தெல்ஃபின் முடிவு செய்கிறார், தாயா நூலகத்தை பற்றி எழுத வேண்டும் என்றும், நேரிடையாக செல்ல முடியாததால் எழுதுவதை தவிர வேறு வழியில்லை.
நூலகத்தின் இயக்குநர் அபு எல்-எஸ் மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். புத்தகம் என்பது ஆபூர்வமான எச்சமிச்சம். புத்தகத்தினை தேடித் தேடி அலைந்தனர். வாய் மொழியாக ஒருவன் வாசிப்பான். ஒருவரைப் பார்த்து மற்றவர் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.” அந்த ஆர்வம் போருக்கெல்லாம் கட்டுப்படாது” அது அவ்வளவு வீரியமான ஆர்வம். அவர்கள் இப்படித்தான் ஆல்கெமிஸ்ட் நாவலை வாசித்தனர். குட்டி இளவரசனையும் வாசித்து உரையாடினர். இப்படியாக உலக இலக்கியங்கள் வாசிக்கப்பட்டது. யுத்தத்தினால் பல நூல் நிலையம் அழிக்கப்பட்டது நமக்கு நினைவு வரலாம். யாழ் நூலகம், பாக்தாத் நூலகம் அழிக்கப்பட்ட போது டைகிரிஸ் நதியின் கலர் மாறியது என்றால் எவ்வளவு புத்தகம் எரிந்திருக்கும். ஈராக் யுத்தத்தின் போது பாஸ்ரா நூலகத்தைப் பாதுகாத்த நூலகர் அலியாவின் வாரிசாக அஹமத், அபு எல்_ எஸ் எனது பார்வைக்குப் படுகின்றனர். தராயா நகரத்தின் மீது தான் அரசுக்கு அப்படி என்ன கோபம்? காரணம் மற்ற ஊர் போல அது இல்லாதது தான். சிந்திக்கக் கூடிய மனிதன் ஆபத்தானவன் என்பதனை தராயா மக்கள் வழியே அரசு அறிந்து கொண்டது. அதனால் தான் குழிக்குள்ளிருந்து ஒரு புத்தகக் கோட்டை முளைத்தது.
அரசுக்கு எதிராக நான் போராடத் துணிந்தேன் என்றால் , அதற்கு காரணம் , நான் பிறந்த மண்ணைப் பாதுகாக்க விரும்புகிறேன். தனி மனித உரிமையைப் பாதுகாக்க விரும்புகிறேன். போராடுவது ஒரு தெரிவு கிடையாது. அது ஒரு தேவை. பன்முகத்தன்மையின் பெயரால் அது நடக்கிறது. ஆக, வாசிப்பு, போராட்டத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதனை கற்றுத் தருகிறது. அதனால் தான் என்னவோ ரபேல் பேர ஊழல் பிரசுரம் அரசுக்கு அச்சத்தை அளிக்கிறது. சென்னை 43வது புத்தகக் கண்காட்சி இரண்டாவது நாள் நிகழ்வும் அப்படியானதுதானே. இதே மாதிரி சிரியாவில் பல புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. தடையின் வழியே முஸ்தபா காலிஃபேயின் அல் கவாக்கா நாவலை வாசித்தனர். அப்படியாக மாக்கிய வெல்லியின் ப்ரின்ஸ் பற்றியும் பேசினர்.
முதல் உலகப் போரில் இராணுவ வீரர்கள் எப்படிப் பதுங்கு குழியில் இருந்து வாசித்தனர் என்பதனை அஹ்மத் தெல்ஃபியிடம் கூறும் உரையாடல் அத்தனை உணர்ச்சிபூர்வமானது. கேப்டன் தங்களின் மனைவிமார்கள் எவ்வாறு புத்தகத்தை தனது கணவர்க்கு அனுப்பிய விதம், அதனை மறை குழியில் இருந்து வாசித்த முறையும், பிரபலமான ஃபிராங்க்ளின் சொசைட்டி 350 நூலகங்களை பாசறையில் தொடங்கியது யுத்த முனையில் வீரர்கள் மனப்பிறழ்ச்சி அடையாமல் காத்தது என்றால் மிகையல்ல. அந்த வாசிப்பு தான் தப்பிப்பதற்கும், நிலை தடுமாறாதிருக்கவும், உயிர் வாழ்வதற்கும் தேவையாயிருந்தது.
யுத்தத்தைத் தடுக்க ஜக்கிய நாடுகள் சபையின் தோல்வியை, செஞ்சிலுவைச் சங்கத்தினை கட்டுபாட்டின் பெயரில் அனுமதித்தது, உலகப் பிரதிநிதிகளைப் பார்க்க அனுமதிக்காமல் செயல்பட்ட விதம் இன்றைய நமது காஷ்மீரினை நினைவுப்படுத்துகிறது. இறுதியாக அஹமத், அபு, நூலகம், மக்கள் என்ன ஆனார்கள் என்பதனை வாசகர்கள் வாசித்து உணர வேண்டியது. யுத்தத்தின் நடுவே நடக்கும் ஸெய்னா – ஹீஸ்லாம் காதல் கதை வாசிப்பின் மகத்துவத்திற்கு சாட்சி. தெல்ஃபின்க்கும் அவரது குழந்தைக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அவ்வளவு கவித்துமானது. கற்பதனால் ஏற்படும் வரம்பு மீறலைத்தான் இப் புத்தகம் பேசுகிறது. புத்தகம் இவ்வளவு தூரம் வழி நடத்தியது என்றால் நமது அன்றாட வாழ்வில் புத்தக வாசிப்பு நம்மை என்னவெல்லாம் செய்யும் வாசிப்பை நேசிப்போம் என்பதெல்லாம் வெறும் கோஷம் அல்ல அது வாழ்க்கை முறை.